எரிபொருள் விலைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். #BreakingNews #FuelPrice #SriLanka
உலக சந்தையில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளின் தாக்கம் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலையை குறைந்த அளவில் உயர்த்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மஹரகமவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போது, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலை எரிசக்தி துறையில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக உலகளவில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போது டீசல் ஒரு லீட்டர் 382 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் அதன் உண்மையான விலை 482 ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும், ஒரு லீட்டருக்கு சுமார் 100 ரூபா அரசாங்கம் மானியமாக வழங்கி வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
இதேநேரத்தில், உலக சந்தையில் விலை மேலும் அதிகரித்தால், உள்நாட்டிலும் விலையை சிறிதளவு திருத்த வேண்டிய நிலை உருவாகும் எனவும் அவர் எச்சரித்தார்.
மேலும், எரிசக்தி நெருக்கடி மின்சாரத் துறையையும் பாதித்துள்ளதாகவும், மின்சார கட்டண உயர்வு ஏற்பட்டாலும் 96% சாதாரண பயனாளர்கள் பாதிக்கப்படாத வகையில் 1,500 கோடி ரூபா மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.
உழைக்கும் மக்களை பாதுகாப்பதே அரசின் நோக்கம் எனவும், உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் மக்களின் சுமையை குறைக்கும் முயற்சியில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், நிலக்கரி மற்றும் எரிபொருள் விலை உயர்வு, நீர்மின் உற்பத்தி குறைவு போன்ற பிரச்சினைகளை சமாளிக்க அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.



No comments:
Post a Comment